சென்னை: தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்க நினைக்கும் கமலை கைது செய்ய வேண்டும் என்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மீது சென்னையைச் சேர்ந்த தேவராஜன் என்பவர் சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றினை கொடுத்துள்ளார். அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நடிகர் கமல், ‘என்னுள் மையம் கொண்ட புயல்’ என்ற தொடரை வார இதழ் ஒன்றில் எழுதி வருகிறார். அதில், “எங்கே ஒரு இந்து தீவிரவாதியை காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது. அந்த அளவுக்கு அவர்கள் கூட்டத்திலும் தீவிரவாதம் பரவி இருக்கிறது” என எழுதியுள்ளார்.
எந்த மதமும் பயங்கரவாதம், தீவிரவாதம் குறித்து போதிக்கவில்லை. அன்பைத்தான் வலியுறுத்துகின்றன. இந்துக்களை தீவிரவாதி என்று கூறி தமிழகத்தில் மிகப்பெரிய வன்முறையை தூண்டும் வகையிலும், இறையாண்மையை கெடுக்கும் விதமாகவும் கமல் செயல்படுகிறார் தமிழகத்தில் பிரிவினையை உண்டாக்க கமல் நினைக்கிறார்..
இந்த விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். அவரை தேசவிரோத சட்டத்தில் கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.