சிறப்பு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அடங்கிய 150 வாகனங்கள் உள்பட 200 மழைக்கால சிறப்பு மருத்துவ வாகனங்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கூடுதலாக அறிமுகப்படுத்தப்பட்ட 150 நடமாடும் சிறப்பு மழைக்கால மருத்துவக் குழுக்கள், நிலவேம்பு குடிநீர் வழங்கும் நடமாடும் 25 வாகனங்கள் மற்றும் குடிநீரில் குளோரின் பரிசோதனை செய்யும் 25 நடமாடும் குழுக்கள் ஆகியவற்றைத் தொடங்கி வைத்து முதல்வர் பேசியது:
மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனுக்குடன் அந்தப் பகுதியிலேயே சிகிச்சை அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், தமிழக அரசு சார்பில் 401 சிறப்பு மருத்துவ முகாம்கள் ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
நடமாடும் மருத்துவக் குழுக்கள் இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள் நோய் அறிகுறி இருந்தால், அந்தப் பகுதியில் உள்ள சிறப்பு மருத்துவ முகாமுக்கு உடனடியாகச் சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளவேண்டும். பொதுமக்களுக்குச் சிகிச்சை அளிக்கும் பணியில், சித்த மருத்துவர்களும் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர் என்றார் அவர்.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.