நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளித்து இறந்த சம்பவம் தொடர்பாக அரசைக் கேலி செய்து சித்திரமாகத் தீட்டி சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக 'கார்ட்டூனிஸ்ட்' பாலா நெல்லை போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை சென்னையில் கைது செய்யப்பட்டார்.
கந்து வட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட தம்பதி, இரு குழந்தைகளுடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி தீக்குளித்து இறந்தனர்.
தமிழகத்தையே உலுக்கிய இச்சம்பவம் குறித்து கார்ட்டூனிஸ்ட் பாலா, அரசைக் கேலி செய்து சித்திரம் வரைந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அளித்த புகாரின்பேரில் 'கார்ட்டூனிஸ்ட்' பாலா மீது நெல்லை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை வந்த நெல்லை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை கோவூரிலுள்ள 'கார்ட்டூனிஸ்ட்' பாலா வீட்டுக்குச் சென்று அவரைக் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நெல்லைக்கு அழைத்துச் சென்றனர்.