கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தென் தமிழகத்திலும் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக தென்மேற்குப் பருவமழை பொழியும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளான குமுளி, கூடலூர், கம்பம், க.புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி, கருநாக்கமுத்தன்பட்டி, குள்ளப்பகவுண்டன்பட்டி, கிழக்குமலை என்றழைக்கப்படும் பச்சக்கூமாச்சி, மேகமலை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தொடர் மழை பெய்து வருகிறது. கிழக்கு மலை பகுதிகளில் மழை பெய்து வருவதால் சுருளி அருவியின் நீராதார பகுதிகளான ஹைவேவிஸ், மணலார், இரவங்கல்லார், தூவானம் உள்ளிட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை முதல் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. பொதுவாக சுருளிஅருவியில் குளிக்கச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரைதான் அனுமதிக்கப்படுவார்கள். ஞாயிற்றுக்கிழமை தண்ணீர் வரத்து அதிகமாக இருந்ததால் வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள் குளிக்க அனுமதி மறுத்தனர். இதனால் ஏமாற்றமடைந்த பயணிகள் சுருளியாற்றில் குளித்தனர்.