மழைக்கான முன்னெச்சரிக்கை கிடைத்தும் எவ்வித நடவடிக்கையையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை என, அதிமுக (அம்மா) துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் குற்றம் சாட்டினார்.
தருமபுரியில் அதிமுக (அம்மா) சார்பில் அதிமுகவின் 46-ஆவது ஆண்டு தொடக்க விழா மற்றும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைமை நிலையச் செயலரும் முன்னாள் அமைச்சருமான பி. பழனியப்பன் தலைமை வகித்தார். இதில் கட்சியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி. தினகரன் பேசியது:
எப்போதும் துரோகம் வென்றதாகவோ, தியாகம் தோற்றதாகவோ சரித்திரம் இல்லை. விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கவிழும்.
அதன்பிறகு எப்போது தேர்தல் வந்தாலும் ஜெயலலிதா வழியில் அதிமுகவின் ஆட்சி கொண்டு வரப்படும்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்கள் எதுவும் இந்த ஆட்சியில் சரிவரத் தொடரவில்லை. மழைக்கான முன்னெச்சரிக்கை கிடைத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. டிசம்பர் வரை சென்னை எப்படி இருக்கப் போகிறதோ தெரியவில்லை.
மதுரை, திருச்சி, தருமபுரியில் பொதுக்கூட்டங்களை நடத்தத் தடை விதிக்கிறார்கள். நீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற்று வருகிறோம். இரட்டை இலை நமக்கு நிச்சயம் கிடைக்கும் என்றார் தினகரன்.
கர்நாடக மாநில அதிமுக செயலர் புகழேந்தி, அமைப்புச் செயலரும் முன்னாள் அரசுத் தலைமைக் கொறடாவுமான ஆர். மனோகரன், எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணைச் செயலர் ஆர்.ஆர். முருகன் (அரூர்), அதிமுக (அம்மா) தருமபுரி மாவட்டச் செயலர் டி.கே. ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் செந்தமிழன், தலைமைக் கழகப் பேச்சாளர் சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் பேசினர்.