தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே மழை காரணமாக திங்கள்கிழமை காலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் பெண் உயிரிழந்தார்.
கும்பகோணம் அருகேயுள்ள கட்டாநகரம், ஆதிதிராவிடர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் ஜெகதம் (62). விவசாய கூலி. இவர், தனது மகன் அருமைதுரை, மருமகள் ஜீவா ஆகியோருடன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு வழங்கிய தொகுப்பு வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில், பருவமழையின் காரணமாக வீட்டின் சுவர் சேதமடைந்து, திங்கள்கிழமை காலை இடிந்து விழுந்தது. இதில், வீட்டில் தனியாக இருந்த ஜெகதம் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த போலீஸார், வருவாய்த் துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். திருப்பனந்தாள் போலீஸார் சடலத்தை கைப்பற்றி திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த பகுதியில் மேலும் 10-க்கும் மேற்பட்ட பழைமையான தொகுப்பு வீடுகள் மழையால் சேதமடைந்த நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.