திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது மனிதாபிமானத்துக்கு எடுத்துக்காட்டு என்றார் மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்.
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை தாமிரவருணி ஆற்றங்கரையில் மகாதேவர் கோயில் அருகே படித்துறை கட்டும் பணிக்கான தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியது:
திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தது மனிதாபிமானத்துக்கான எடுத்துக்காட்டு. இருவருக்கும் இடையே கொள்கை ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஐந்துமுறை தமிழக முதல்வர், சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்திக்காதவர் கருணாநிதி. அவர் உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் நிலையில், பிரதமர் அவரை சந்தித்திருப்பது மகிழ்ச்சியான நிகழ்வு.
முந்தைய காலத்தில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தும், அவருக்கு நேரம் ஒதுக்கப்படாததற்கு அப்போது பல காரணங்கள் இருந்திருக்கலாம். தற்போது, கருணாநிதியை பிரதமர் சந்தித்தது உருக்கமான நிகழ்வு.
குமரி மாவட்டம், சாமித்தோப்பில் விமான நிலையம் அமைப்பது குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடிகர் கமல்ஹாசன் புதிய கட்சி தொடங்குவதற்கு வாழ்த்துகள் என்றார் அவர்.