தேனி மாவட்டம் சுருளி அருவியில், தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரிப்பால், 5 -ஆவது நாளாக வியாழக்கிழமை சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது.
வடகிழக்கு பருவமழை எதிரொலியாக சுருளி அருவியின் நீர்பிடிப்பு பகுதிகளான ஹைவேவிஸ் மலை அணைப் பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்ததையடுத்து, அங்கிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதனால், சுருளி அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதையடுத்து ஞாயிற்றுக்கிழமையிலிருந்து (நவ. 5) அங்கு குளிக்க மேகமலை வன உயிரின சரணாலய அதிகாரிகள் தடை விதித்தனர்.
இந்நிலையில், சுருளி அருவிக்கு வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நீராட முடியாமல் அருகில் செல்லும் சுருளியாற்றில் குளித்துச் சென்றனர்.
இதனிடையே வியாழக்கிழமை வரை அருவியில் வெள்ளப் பெருக்கு குறையாமல் இருந்ததால் அங்கு யாரும் சென்றுவிடாமல் இருப்பதற்காக தடுப்புக் கம்பிகள் வைத்து தடை ஏற்படுத்தி உள்ளனர்.
இதுகுறித்து சரணாலய ஊழியர் ஒருவர் கூறும் போது, 'அருவியில் நீர்வரத்து குறைந்தால் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்' என்றார்.