அணில் சேமியா நிறுவனத்தின் விளம்பர தூதராக இருப்பதன் மூலம் கிடைத்துள்ள பணத்தின் ஒரு பகுதியான ரூ.49.70 லட்சத்தை, கல்வியில் பின்தங்கிய அரியலூர் மாவட்டத்துக்கு உதவித் தொகையாக வழங்குவதாக நடிகர் விஜய் சேதுபதி அறிவித்தார்.
அணில் நிறுவனத்தின் புதிய உணவுப் பொருள்களுக்கான அறிமுக விழா திண்டுக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:
அணில் சேமியா விளம்பர படத்தில் நடித்ததற்காக எனக்கு கிடைத்துள்ள தொகையின் ஒரு பகுதியை கல்வி உதவித்தொகையாக வழங்க முடிவு செய்துள்ளேன். கல்வியில் பின்தங்கிய மாவட்டமான அரியலூரில் மொத்தமுள்ள 774 அங்கன்வாடி மையங்களுக்கு தலா ரூ.5ஆயிரம் வீதமும், தமிழகத்தில் உள்ள 21 அரசு பார்வையற்றோர் மற்றும் செவித்திறன் குறைந்தோர் பள்ளிகளுக்கு தலா ரூ.50ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.49.70 லட்சத்தை தமிழக அரசிடம் வழங்க முடிவு செய்துள்ளேன்.
மாணவி அனிதாவின் நினைவாக... கல்வியில் பின்தங்கிய மாவட்டத்திலிருந்து அதிக மதிப்பெண் பெற்றும் மருத்துவராக முடியாமல் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் நினைவாக இந்த உதவித்தொகையை வழங்குகிறேன் என்றார் அவர்.
அதனைத் தொடர்ந்து அணில் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கமலஹாசன், செயல் இயக்குநர் சுகுமார் ஆகியோர் பேசுகையில், "30 ஆண்டுகளுக்கு மேலாக உணவுப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் அணில் நிறுவனத்தின் சார்பில், நவதானிய உணவுப் பொருள்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் விவசாயிகளிடம் இருந்து நவதானியங்களை நேரிடையாகக் கொள்முதல் செய்வோம்' என்றனர்.