பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்காக (இஸ்ரோ) , "மேக் இன் இந்தியா' (இந்தியாவில் தயாரிப்போம்) திட்டத்தின்கீழ் முதன்முதலாக கோவையில் தயாரிக்கப்பட்ட விண்கலக் கொள்கலனை ஒப்படைக்கும் விழா, துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பொதுவாக, இந்தியாவில் உருவாக்கப்படும் சில ராக்கெட்டுகள் அமெரிக்காவில் உள்ள பிரெஞ்ச் கயானா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும். ராக்கெட்டுகளை அங்கே கொண்டு செல்வதற்குரிய விண்கலக் கொள்கலன்கள் வெளிநாடுகளிலிருந்தே தருவிக்கப்பட்டு வந்தன. இதற்கு அதிக பொருள் செலவும், நேர விரயமும் ஆயின.
இதனைத் தவிர்க்கும் வகையில், விண்கலக் கொள்கலன்களை இந்தியாவிலேயே தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, இப்பணி கோவை, வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா ஹைடெக் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இஸ்ரோ விஞ்ஞானி பி.நரேஷ் மேற்பார்வையில் கடந்த 8 மாதங்களாக நடைபெற்று வந்த கொள்கலன் தயாரிக்கும் பணி அண்மையில் நிறைவடைந்தது.
இந்த விண்கலக் கொள்கலனை பெங்களூரில் உள்ள இஸ்ரோவிடம் ஒப்படைப்பதற்கான விழா வெள்ளக்கிணறில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், இஸ்ரோ, ஜியோசாட் பிரிவின் திட்ட இயக்குநர் டி.கே.அனுராதாவிடம் கொள்கலன் ஒப்படைக்கப்பட்டது.
இஸ்ரோவின் துணை இயக்குநர் வி.கே.ஹரிஹரன், இஸ்ரோ விண்வெளி மையக் குழுத் தலைவர் எஸ்.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
வெள்ளக்கிணறு பகுதியில் உள்ள வெங்கடேஷ்வரா ஹைடெக் நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, இஸ்ரோ அனுப்பும் ராக்கெட்டுகளுக்கான உதிரிபாகங்களைத் தயாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.