மாமல்லபுரத்தில் வெள்ளிக்கிழமை பலத்த காற்றுடன் ராட்சத அலைகள் எழும்பி கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்ததை அடுத்த கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக மாமல்லபுரம் பகுதியில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. ராட்சத அலைகள் கரையைத் தாண்டி வந்ததால் கடல்நீர் வெளியேற வழியின்றி குளம்போல் தேங்கியது. கடல்நீர் குடியிருப்புப் பகுதிகளுக்கு வருவதால் மீனவர்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
வானிலை மாற்றம் காரணமாக மாமல்லபுரத்தில் கடல் தொடர்ந்து 4, 5 நாள்களாக சீற்றத்துடன் காணப்பட்டது. ராட்சத அலைகள் கரையில் பலமாக மோதி வருகிறது . இதனால் கடற்கரைப் பகுதியில் பலத்த காற்று வீசுகிறது. இதனால் கடலோரப் பகுதியில் வசிப்பவர்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.
ராட்சத அலையின் காரணமாக மாமல்லபுரம், கொக்கிலிமேடு, வெண்புருஷம்குப்பம், சூளேரிக்காட்டுக்குப்பம், சதுரங்கப்பட்டினம், நென்மேலிகுப்பம், தேவனேரி குப்பம், கோவளம், உய்யாளிக்குப்பம் உள்ளிட்ட குப்பங்களில் இருந்து மீனவர்கள் யாரும் மீன்பிடிக்கக் கடலுக்குள் செல்லவில்லை . இதனால் மாமல்லபுரம் கடற்கரைப் பகுதி வெறிச் சோடியது. மீனவர்கள், தங்கள் படகுகளை கரையின் ஓரத்தில் அப்புறப்படுத்தியுள்ளனர். கடல் சீற்றத்தினால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்லாததால் வருமானமின்றி அன்றாட உணவுக்கே சிரமப்படுவதாகத் தெரிவித்தனர்.