சென்னையின் பிரதான சாலைகளில் ஒன்றாக விளங்கும் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி அருகில் அமைந்துள்ள காதட்ரில் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பயங்கர விபத்து ஏற்பட்டது.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது:
காதட்ரில் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விபத்து ஏற்பட்டது. குடிபோதையில் இருந்த கல்லூரி மாணவர் கார் விபத்து ஏற்படுத்தினார். இதனால் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் சில ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கே.நவநீத் (20 வயது), அண்ணா நகரைச் சேர்ந்தவர். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் 2-ஆம் ஆண்டு பயின்று வருகிறார். குடிபோதையில் இருந்த இவர் சேவ்ரோலட் க்ரூஸ் வகை காரை ஓட்டியுள்ளார். மேலும் அந்த காரில் ஆர்.கிரண் குமார் (வயது 19), ஆர்.விஷால் ராஜ்குமார் (வயது 19), என்.ஹரி கிருஷ்ணன் (வயது 21) மற்றும் பி.வினோத் (வயது 20) ஆகியோர் பயணம் செய்துள்ளனர்.
சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரிகளைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் சனிக்கிழமை இரவு நடைபெற்ற மது விருந்தில் கலந்துகொண்டு வீடு திரும்பியபோது இந்த விபத்தை ஏற்படுத்தினர்.
சாலையோரம் நின்றிருந்த ஆட்டோகளின் மீது கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஆட்டோ ஒட்டுநர் ராஜேஷ் (வயது 33) உயிரிழந்தார். மற்றவர்கள் காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக இவர்கள் அனைவரின் மீதும் அடையாறு காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் மாதம் இதேபோன்று காதட்ரில் சாலையில் குடிபோதையில் உயர்ரக போர்ஷ் காரைக் கொண்டு விபத்து ஏற்படுத்தியதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 12 ஆட்டோக்கள் நொருங்கியது. 8 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. விபத்து ஏற்படுத்திய விகாஸ் என்ற இளைஞர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டிய பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.