சென்னை: அதிமுக அம்மா அணியின் பொதுச் செயலாளரான சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜர் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரின் வீடுகளில் கடந்த 8-ஆம் தேதி துவங்கி தொடர்ச்சியாக வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.சில இடங்களில் மட்டும் சோதனை முன்னரே நிறைவு பெற்றுள்ளது. இதன் காரணமாக சோதனைக்கு உள்ளானோருக்கு வருமான வரித்துறை சார்பில் சம்மன்கள் அனுப்பப்படும் என்று தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சசிகலாவின் உறவினர் மருத்துவர் சிவகுமார் வருமான வரித்துறை அலுவலகத்தில் தற்பொழுது ஆஜர் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் சகோதரரான சுந்தவதானத்தின் மருமகனே மருத்துவர் சிவகுமார் ஆவார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவருக்கு சிவகுமார் தனிப்பட்ட மருத்துவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 8-ஆம் தேதியே இவரது வீட்டில் சோதனை நடைபெற்றது. இவரைத் தொடர்ந்து இன்னும் பலர் ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.