திருவள்ளூர் மாவட்டத்தில், தமிழக அரசின் இலவச சேவைக்கான 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் போதிய பராமரிப்பின்றியும், ஊழியர்கள் பற்றாக்குறையாலும் சேவை முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
மக்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைக்கவேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் தமிழக அரசால் கொண்டுவரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் சேவை இன்று மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 836 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயக்கப்பட்டாலும், போதிய பராமரிப்பின்றியும், ஊழியர்கள் பற்றாக்குறையாலும் பெரும்பாலான வாகனங்கள் முடங்கிக் கிடக்கின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 36 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன. ஒட்டுமொத்த மாவட்டத்திற்கும் இவை போதுமானதாக இல்லை. அவசரத் தேவைக்காக அழைக்கப்படும்போது, ஆம்புலன்ஸ் வந்து சேர 1 மணி நேரத்துக்கும் மேலாகிறது.
பின்னர், நோயாளியை ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்குச் செல்ல 2 முதல் 3 மணி நேரமாகிறது. இதனால், நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும், ஆம்புலன்ஸ் வாகனத்திற்குரிய அத்தியாவசிய தேவையான குளிர்சாதன வசதியும் இல்லை.
இங்குள்ள பெரும்பாலான வாகனங்களில் குளிர்சாதன இயந்திரம் பழுதடைந்துள்ளது. இதனால் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
அம்பத்தூரில் ஊழியர்கள் பற்றாக்குறையால், பகலில் மட்டுமே இலவச ஆம்புலன்ஸ் இயக்கப்படும் அவல நிலை நீடிக்கிறது.
இதனால் இரவில் விபத்து ஏற்பட்டால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் பாதிக்கப்பட்டவரை அழைத்துச்செல்லவேண்டிய நிலை உள்ளது.
இம்மாவட்டத்தில் கூடுதல் எண்ணிக்கையில் அரசின் இலவச ஆம்புலன்ஸ் வாகனங்களை இயக்கவும், இருக்கின்ற வாகனங்களை நல்லமுறையில் பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.