இந்திய கடலோர காவல்படை பயிற்சியின்போது பிளாஸ்டிக் குண்டு பாய்ந்து மீனவர் காயம்

ராமேசுவரம் அருகே பாக் நீரிணைப் பகுதியில் திங்கள்கிழமை இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது, பிளாஸ்டிக் குண்டு பாய்ந்து ராமேசுவரம் மீனவர் காயமடைந்தார்.

ராமேசுவரம் அருகே பாக் நீரிணைப் பகுதியில் திங்கள்கிழமை இந்திய கடலோர காவல்படையினர் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது, பிளாஸ்டிக் குண்டு பாய்ந்து ராமேசுவரம் மீனவர் காயமடைந்தார்.
 ராமேசுவரத்தில் இருந்து திங்கள்கிழமை காலையில் 429 விசைப் படகுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். பாக் நீரிணை பகுதியில் மரிய ஜெபமாலை என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சில மீனவர்கள் மீன்பிடித்து விட்டு பிற்பகலில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்பகுதியில் இந்திய கடலோரக் காவல் படையினர் பாதுகாப்புப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். இதில், அவ்வழியே வந்த ஜெபமாலை படகில் இருந்த மீனவர் பிச்சை மீது பிளாஸ்டிக் குண்டு பாய்ந்தது. இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியதால் மயங்கினார். இதனைக் கண்ட சக மீனவர்கள் அதிர்ச்சியடைந்து இந்திய கடலோரக் காவல் படையினர் தங்களை துப்பாக்கியால் சுட்டு விட்டதாக மீனவ சங்கத் தலைவர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.இதனால் மீனவர்கள் இடையே பதற்றம்
 ஏற்பட்டது.
 இதற்கிடையே துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காயமடைந்த மீனவரை இந்திய கடலோரக் காவல் படையினர் மீட்டு மருத்துவ சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டபோது மீனவர்களின் படகு குறுக்கே வந்ததால் இந்தச் சம்பவம் நடந்தாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் மீனவர்களிடையே பதற்றம் தணிந்தது. எனினும், செவ்வாய்க்கிழமை மீனவர்கள் கரை திரும்பிய பின்னரே முழுமையான விவரம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com