விவசாயக் கடன்களை வசூலிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் டிராக்டர் வாங்க பாரத ஸ்டேட் வங்கியில் கடன் பெற்ற விவசாயி ஞானசேகரன், கடனைத் திரும்பச் செலுத்தாததால், கடன் வசூலிக்கும் நிறுவனத்தின் நபர்கள் அடித்து துன்புறுத்தியதில் உயிரிழந்தார். இறந்த விவசாயி ஞானசேகரனின் குடும்பத்துக்ககு ரூ.1 கோடி இழப்பீடு கோரி முற்போக்கு வழக்குரைஞர் சங்கம் சார்பில் அதன் தலைவர் ரஜினிகாந்த் பொதுநல வழக்குத் தொடர்ந்தார். அதில் வாங்கிய கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாத விவசாயிகள் தாக்கப்படுவதும், தற்கொலை செய்து கொள்வதும் அதிகரித்து வருகிறது.
இது போன்ற சம்பவங்களைத் தடுக்கும் வகையில், வங்கிகடன்களை வசூலிக்கப் புதிய விதிகள் அமைக்கவும், அதற்கான வழிமுறைகளை வகுக்க இந்திய ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் ஒரு வார காலத்துக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.