பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர் மற்றும் தட்டச்சர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்டோருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பள்ளிகளின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், பள்ளிக் கல்வித் துறையின் திட்டப் பணிகளைச் சீரிய முறையில் செயல்படுத்த ஆசிரியர் அல்லாத காலியிடங்களை நிரப்புதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
அவ்வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 199 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 125 தட்டச்சர்கள் பள்ளிக் கல்வித் துறைக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 10 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செவ்வாய்க்கிழமை வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமையன்றே மீதமுள்ள நபர்களுக்கும், அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்களாலும் சென்னையில் பள்ளிக் கல்வி இயக்கக வளாகத்தில் தட்டச்சர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநராலும் பணி நியமன உத்தரவுகள் அளிக்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.