தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவைப் பின்பற்றாததால் திமுக சார்பில் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் புதன்கிழமை (நவ. 15) மீண்டும் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பான வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், செப்டம்பர் 18-ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான தேர்தல் அட்டவணையை வெளியிட்டு, நவம்பர் 17-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உத்தரவிட்டு, இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இந்தத் தீர்ப்பு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் இறுதித் தீர்ப்புக்குக் கட்டுப்பட்டது எனத் தெரிவித்திருந்தனர்.
சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவை மாநிலத் தேர்தல் ஆணையமும் தமிழக அரசும் முறையாகப் பின்பற்றவில்லை என்று கூறி திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகள் நீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்று வருவதாகவும் கால தாமதத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்புக் கோருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெஃரோஸ் கான், தேர்தல் ஆணையத்தின் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் ஆஜராகினர். மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் , உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தின் கடமைகளைச் செய்ய தேர்தல் ஆணையம் தவறிவிட்டது. தொகுதி வரையறைப் பணிகளைக் காரணம் காட்டித் தேர்தலை நடத்தாமல் காலதாமதம் செய்து வருவதாக வாதிட்டார்.
இதையடுத்து இந்த வழக்கை புதன்கிழமைக்கு (நவ.15) ஒத்திவைத்த நீதிபதிகள், மாநிலத் தேர்தல் ஆணையர் மற்றும் செயலாளர் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டனர்.