தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீது வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.
வைகோ: ராமேசுவரம் அருகே கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இதுவரை இலங்கைக் கடற்படையினர் சுட்டுக் கொல்வதை இந்தியக் கடற்படை தடுக்காமல் வேடிக்கை பார்த்தது. இப்போது இவர்களே தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம். மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய கடலோரக் காவல்படையினர் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜவாஹிருல்லா: இந்திய கடலோரக் காவல்படையினர் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது வன்மையாகக் கண்டித்தக்கது.
இதுவரை இலங்கை போன்ற அயல்நாட்டுப் படையினரால் துப்பாக்கிச் சூட்டினாலும் தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் மீது தற்போது இந்தியக் கடலோரக் காவல்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இச்சம்பவத்தைக் கொலை முயற்சி வழக்காகப் பதிவு செய்வதற்கு உடனடியாக தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.