நீட் தேர்வு பயிற்சி மையங்களைக் கைவிட்டு, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
நீட் தேர்வு உள்பட மத்திய அரசின் போட்டித் தேர்வுகளை எதிர்கொள்வதற்கான பயிற்சி மையங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்துள்ளார். தமிழகத்தின் ஒரே குரலாக நீட் தேர்வை நிராகரித்து சட்டப் பேரவையில் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
தமிழகம் கேட்பது நீட் தேர்வில் இருந்து விலக்கே தவிர, வேறு இல்லை. எனவே, உடனடியாக பயிற்சி மைய ஏற்பாட்டைக் கைவிட்டு, நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.