தமிழகத்தில் உற்பத்தியாகும் காற்றாலை மின்சாரத்தை பிற இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு பசுமை வழித்தடம் அமைத்து தர மத்திய அரசு முன்வந்துள்ளது என தமிழக மின்துறை அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
மத்திய மின்பகிர்மானக் கழகம் சார்பில் மின்சேமிப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு மாநில அளவிலான ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
நிகழ்ச்சியை அடுத்து நிருபர்களிடம் அவர் கூறியது: எரிசக்தி சேமிப்பை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தில் எரிசக்தி வாரவிழா என்று நடத்தப்பட்டு வருகிறது. நாட்டிலேயே காற்றாலை மூலம் மின்சார உற்பத்தி செய்யும் பட்டியலில் தமிழகம் முன்னிலை வகிக்கிறது.
தற்போது மின் உற்பத்தி அதிகமாக இருக்கும் காரணத்தால் வேறு மாநிலங்களுக்குக் கொண்டு செல்ல பசுமை வழித்தடம் வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மத்திய அரசும் பரிசீலனை செய்து வருகிறது என்றார்.