ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், தங்களை ஹிந்தியில் பேசச்சொல்லி தாக்கியதாக கரை திரும்பிய மீனவர்கள் செவ்வாய்க்கிழமை புகார் தெரிவித்தனர்.
இன்று வேலைநிறுத்தம்: ராமேசுவரம் மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை கண்டித்து, ராமேசுவரம் துறைமுகத்தில் அனைத்து மீனவ சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதில், தூப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடலோர காவல் படையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்வதுடன், கைது நடவடிக்கை எடுக்க வேண்டும், இச்சம்பவத்தைக் கண்டித்து புதன்கிழமை அடையாள வேலைநிறுத்தப் போராட்டமும், அதனையடுத்து வியாழக்கிழமை ராமேசுவரம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கொலை வழக்குப் பதிவு: முன்னதாக, மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது தொடர்பாக, இந்தியக் கடலோர காவல் படை மீது, மண்டபம் கடலோர காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் காவல் துறையினர் கொலை முயற்சி, காயம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.