தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ். பாலச்சந்திரன் செவ்வாய்க்கிழமை கூறியது:
வடகிழக்குப் பருவமழை தொடங்கியதை அடுத்து தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக வடகடலோர மாவட்டங்களிலும், உட்புற மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவி வந்த வலுவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது வட திசையில் நகர்ந்து தென் மேற்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் நீடிக்கிறது. இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் வடகடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பதிவாகியுள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின் நகர்வைப் பொருத்து சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம் உள்ளிட்ட ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. செவ்வாய்க்கிழமை மாலை முதல் மழை படிப்படியாகக் குறையும் என்றார் பாலச்சந்திரன்.
திருவள்ளூரில் 70 மி.மீ.: செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி , அதிகபட்சமாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் 70 மி.மீ. மழையும், ராமேஸ்வரம், பாம்பன், எண்ணூர் பகுதிகளில் தலா - 60 மி.மீ. , மழையும் பதிவாகியுள்ளது.
பிற இடங்களில் பதிவான மழை (மி.மீ.ல்.): புழல், ரெட்ஹில்ஸ் - 50 , சோழவரம் -4, சென்னை டிஜிபி அலுவலகம், பரமக்குடி, தாமரைப்பாக்கம், சென்னை நுங்கம்பாக்கம், சென்னை மாதவரம் - 30.