சென்னை: வருமான வரித்துறை சோதனைக்கும், அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா கூறியுள்ளார்.
நவம்பர் 9ம் தேதி தமிழகத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறையின் அதிரடிச் சோதனையில் சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகளும், விவேக்கின் சகோதரி கிருஷ்ணபிரியாவின் வீடும் அடங்கும். சுமார் 5 நாட்களாக கிருஷ்ணபிரியாவின் வீட்டில் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் கிருஷ்ணபிரியா இன்று நேரில் ஆஜரானார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணபிரியா, என்னுடைய சொத்துக் கணக்கை சமர்ப்பிக்க வருமான வரித்துறைக்கு வந்தேன். கணக்குகளை சமர்ப்பித்துவிட்டேன்.
குடும்பத்தாரின் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் அரசியல் எதுவும் இல்லை. வருமான வரித்துறை சோதனை வழக்கமாக நடைபெறும் ஒன்றுதான்.
என் வீட்டில் நடந்த சோதனையில் எந்த ஆவணங்களும் கைப்பற்றப்படவில்லை. வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன் என்று கூறினார்.