தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காணவே பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார் என, மத்திய கப்பல் துறை இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவது மிகவும் வேதனை தரக்கூடிய விஷயம். ஏற்றுக் கொள்ளவே முடியாது. தமிழக மீனவர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண பிரதமர் நரேந்திர மோடி ஒரு மிகப்பெரிய திட்டத்தை தீட்டியுள்ளார். தாற்காலிக தீர்வு அல்ல, நிரந்தரத் தீர்வு காணவே பிரதமர் விரும்புகிறார். மீனவர்களும் அதனை நன்கு அறிவர்.
மீனவர்களுக்கு மானிய விலையில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் வழங்க ரூ. 1,500 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக மத்திய அரசு ரூ. 200 கோடி ஒதுக்கீடு செய்து, ராமேசுவரத்தை சேர்ந்த மீனவர்களுக்கு கொச்சியில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் படகுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மீனவர்களுக்கு பயிற்சி கொடுப்பதாக இருந்தாலும் சரி, அவர்களுக்கு படகுகள் கட்டிக் கொடுப்பதாக இருந்தாலும் சரி எல்லா வகையிலும் மத்திய அரசு தெளிவாக இருக்கிறது. வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ஒவ்வொரு முறையும் தனது வீட்டில் ஒரு சம்பவம் நடைபெறுவது போல உணர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, நிச்சயமாக இந்த பிரச்னைக்கு விரைவில் நிரந்தரத் தீர்வு வரும். ஆனால், இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளை கொஞ்சம் முடக்கி வைத்தால் சரியாக இருக்கும் என கருதுகிறேன். இந்த விஷயத்தில் இலங்கை அரசுக்கு மத்திய அரசு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதேநேரத்தில் இந்த விஷயத்தில் எடுத்தேன், கவிழ்த்தேன் என நடவடிக்கை எடுக்க முடியாது என்றார் அவர்.
பேட்டியின் போது கட்சியின் மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.