தமிழகத்தின் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
இலங்கைக்கு அருகே வளிமண்டலத்தின் மேலடுக்கில் சுழற்சி காணப்படுகிறது. இதன் காரணமாக, தென் தமிழகத்தின் சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். வடதமிழகத்தின் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டமாகக் காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தூத்துக்குடியில் 30 மி.மீ.: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான நிலவரப்படி, தூத்துக்குடியில் 30 மி.மீ., மழை பெய்துள்ளது. விருதுநகரில் 20 மி.மீ., காஞ்சிபுரம் மாவட்டம் கேளம்பாக்கத்தில் 10 மி.மீ. மழை பெய்துள்ளது.