புற்றுநோயாளிகளின் உடல்நலனை மேம்படுத்துவதில் பிசியோதெரபிக்கு முக்கியப் பங்கு உண்டு என்று அடையாறு புற்றுநோய் மருத்துவ மையத் தலைவர் டாக்டர் வி.சாந்தா கூறினார்.
சென்னை ஸ்ரீபாலாஜி பிசியோதெரபி மருத்துவக் கல்லூரியும் அடையாறு புற்று நோய் மருத்துவ மையமும் இணைந்து சனிக்கிழமை நடத்திய தேசியக் கருத்தரங்கில் அவர் மேலும் பேசியது:
இந்தியாவில் புற்றுநோயால் 25 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுகின்றனர். ஆண்டுக்கு ஏறத்தாழ 5.5 லட்சம் புற்று நோயாளிகள் உயிரிழக்கின்றனர். புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்ற நோயாளிகளில் பெரும்பாலோனோர் மனது, உடல் அளவிலும் சோர்வு, தளர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
அவர்களது அன்றாட அத்தியாவசியக் கடமைகளைக் கூட செய்ய முடியாத அளவுக்கு சிலர் பாதிக்கப்படுகின்றனர்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் பல்வகை சிகிச்சைக்குப் பிறகு, மருத்துவர்களின் வழிகாட்டலின்படி மேற்கொள்ளப்படும் பிசியோதெரபி சிகிச்சை, நோயாளிகளின் வலி, பயம், மனச்சோர்வு ஆகியவற்றை நீக்கி அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உறுதுணை புரிகிறது. எனவே புற்றுநோயாளிகளின் உடல்நலனை மேம்படுத்த உதவும் பிசியோதெரபி மருத்துவப் படிப்புக்கான பாடத் திட்டத்தில் புற்றுநோய் மருத்துவ சிகிச்சை குறித்து சேர்க்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
பாரத் பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் வி.கனகசபை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைமை பிசியோதெரபி மருத்துவர் சீனிவாசன் விஜெய், ஸ்ரீபாலாஜி பிசியோதெரபி மருத்துவக் கல்லூரி முதல்வர் எஸ்.எஸ்.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.