மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பொறுப்புடன் பேச வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் கூறினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது உருவ படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழக மீனவர்கள் மீது இந்தியக் கடலோர காவல் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. இந்தச் சம்பவம் குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, கடலோர பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை என்று கூறியிருக்கிறார். நாட்டின் பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பு வகிக்கும் அவர், பொறுப்புடன் பேச வேண்டும். இந்தச் சம்பவத்தை மறைக்க முயற்சிக்கக் கூடாது.
தமிழக விவசாயிகள் தில்லியில் 3 மாதங்களாகப் போராட்டம் நடத்தியும், பாஜக அரசு விவசாயிகள் மீது அக்கறை கொள்ளவில்லை. விவசாயிகள் கடன்களைத் தள்ளுபடி செய்ய முன்வரவில்லை.
முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் ஆட்சியில் விவசாயிகளின் ரூ.80 ஆயிரம் கோடிக்கு கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. தமிழகத்தில், திமுக ஆட்சியின் போது ரூ. 7 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. விவசாயிகளின் கடன்களைத் தள்ளுபடி செய்ய தமிழக அரசு அழுத்தம் கொடுத்து, விவசாயிகளைக் காப்பாற்ற முன் வரவேண்டும் என்றார் அவர்.