சென்னை: சத்துணவில் முட்டை வழங்கப்படுவது நிறுத்தம் என்ற தகவல் உண்மையானதல்ல என்று சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா விளக்கமளித்துள்ளார்.
முட்டை விலை வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதால், மாணவர்களுக்கான சத்துணவு திட்டத்துக்கு நாமக்கல் கோழிப் பண்ணையாளர்களிடம் இருந்து முட்டை கொள்முதல் செய்து வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான ஸ்டார்லின் வெளியிட்ட அறிக்கையில், இரண்டு வயது குழந்தைகள் முதல் சுமார் 69 லட்சம் பள்ளி மாணவ – மாணவியர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் சத்துணவுத் திட்டத்திற்குத் தேவையான முட்டைகளை கொள்முதல் செய்வதில் அதிமுக அரசு அலட்சியம் காட்டியிருப்பதால், சத்துணவு மையங்களுக்கு முட்டைகள் வழங்கப்படவில்லை”, என்ற செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன். பொறுப்பற்ற அதிமுக அரசின் இச்செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதாக குற்றம் சாட்டியிருந்தார்..
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சரோஜா பேசியதாவது:
சத்துணவில் முட்டை வழங்கப்படுவது நிறுத்தம் என்ற தகவல் உண்மையானதல்ல; இதுகுறித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆதாரமில்லாத , உண்மைக்குப் புறம்பான தகவல்களைத் தெரிவித்துள்ளார். முட்டை விநியோகம் தடையின்றி நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.