டிச.31-க்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: பணிகளைத் தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு! 

வரும் டிசம்பர் 31-க்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் தேர்தல் பணிகளைத் துவங்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
டிச.31-க்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தல்: பணிகளைத் தொடங்க உயர் நீதிமன்றம் உத்தரவு! 

சென்னை: வரும் டிசம்பர் 31-க்குள் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் தேர்தல் பணிகளைத் துவங்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு காலியாக இருந்த ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்யப்பட்டதால் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ரத்து ஆர்.கே நகர் தொகுதி தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி கே.கே.ரமேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தும் என நம்புவதாக முன்னதாக கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தத் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கிய பின்னரே தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்த வழக்கு, இந்தத் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்தவர்கள் மீது வருமான வரித் துறை மற்றும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுத்த பின்னரே தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் மருதுகணேஷ் தொடர்ந்த வழக்கு என 2 வழக்குகள் தலைமை நீதிபதி அடங்கிய அமர்வில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், திமுக தொடர்ந்துள்ள இந்த இரண்டு வழக்குகளின் காரணமாகவே ஆர்.கே.நகர் தொகுதிக்கு தேர்தல் தேதியை அறிவிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த வழக்குகளை உடனடியாக விசாரிக்க வேண்டும் என முறையிட்டார்.

இதனையடுத்து இந்த வழக்குகளை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.அதன்படி இந்த வழக்குகள் இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் நீதிபதி எம்.சுந்தர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்பொழுது தேர்தல் ஆணையம் சார்பில் ஆர்.கே.நகர் தொகுதியில் 45000 க்கும் மேற்பட்ட போலி வாக்காளர்கள் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அத்துடன் இது திமுக தனது மனுவில் தெரிவித்திருந்த அளவை விடக் கூடுதல் என்பதும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் முன்னரே கூறியிருந்தபடி டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என்ற உத்தரவில் எந்த மாறுதலும் இல்லை. எனவே  இடைத் தேர்தலை நடத்தி முடிக்கும் வகையில் தேர்தல் பணிகளைத் துவங்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com