சென்னை: தமிழக அரசின் பொது விநியோகத் துறையின் கீழ் வரும் ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும் முறையில் புதிய மாற்றம் கொண்டு வந்து தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிகத் துறையின் முதுநிலை மேலாளரிடம் இருந்து கிடங்கு பொறுப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழக அரசின் நுகர்பொருள் வாணிகத் துறைக்கு இந்திய உணவுக்கு கழகத்திடம் இருந்து அரிசியானது 70:30 என்ற விகிதத்தில் வழங்கப்படுகிறது. அதாவது 70% புழுங்கல் அரிசியும், 30% பச்சரிசியும் வழங்கப்படுகிறது. எனவே இதே விகிதத்திலேயே நுகர்வோருக்கும் வழங்குமாறு இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதன் மூலம் இனி குடும்ப அட்டையின் மூலம் 20 கிலோ அரிசி பெறும் ஒரு வாடிக்கையாளருக்கு அதில் 14 கிலோ புழுங்கல் அரிசியும், 6 கிலோ பச்சரிசியும் வழங்கப்பட வாய்ப்புள்ளது.