அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராகப் பணியாற்றி வரும் பேராசிரியர் கணேசனுக்கு, ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. முழு நேரப் பதிவாளராக அல்லாமல், பொறுப்பு பதிவாளராக இந்த ஓராண்டுக்கு அவர் பணிபுரிவார்.
அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளராகப் பணியாற்றி வரும் எஸ்.கணேசன் கடந்த 2013-இல் பொறுப்பு பதிவாளராகவும் 2014-இல் முழு நேர பதிவாளராகவும் நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம் நவம்பர் 24-ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில், புதிய பதிவாளர் எப்போது நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு பேராசிரியர்களிடையே எழுந்தது.
பல்கலைக்கழக விதிகளின்படி பதிவாளர் பதவிக் காலம் முடிவடைவதற்கு 2 மாதங்களுக்கு முன்னரே, புதிய பதிவாளரைத் தேர்வு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட வேண்டும். ஆனால், அதுபோன்ற எந்த அறிவிப்பும் இப்போது செய்யப்படவில்லை.
பொறுப்புப் பதிவாளர்: இருந்தபோதும், பல்கலைக்கழக பேராசிரியர்கள் சிவக்குமார், முத்தன், ராஜேந்திரன், குமார், எஸ். ஸ்ரீநிவாசுலு ஆகிய 5 பேர் பதிவாளர் பதவிக்கு முயற்சித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இவர்களின் முயற்சிகளை முறியடித்து, தொடர்ந்து பதிவாளர் பதவியைத் தக்க வைத்துள்ளார் பேராசிரியர் கணேசன். இம்முறை முழுநேரப் பதிவாளராக அல்லாமல், பொறுப்புப் பதிவாளராக மீண்டும் அவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தர் நியமிக்கப்படும் வரை அல்லது அதிகபட்சம் ஓராண்டுக்கு இந்தப் பதவியை வகிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.