திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் தற்கொலைக்குக் காரணமான திரைப்பட ஃபைனான்சியர் அன்புச்செழியனைக் கைது செய்ய 3 தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமார் செவ்வாய்க்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இயக்குநரும், நடிகருமான சசிகுமாரின் மைத்துனரான இவர், சசிகுமாரின் திரைப்பட நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளராவும், அலுவலக நிர்வாகியாகவும் இருந்து வந்தார்.
தற்கொலை செய்துகொண்ட அசோக்குமார், தனது கடிதத்தில் ஃபைனான்சியர் அன்புச்செழியனிடம் பெற்ற கடனுக்கு கந்துவட்டி கொடுத்து வந்ததும் அவர் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டி வந்ததும் அதனால்தான் தற்கொலை முடிவு எடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அக்கடிதத்தின் அடிப்படையில் வளசரவாக்கம் போலீஸார், அன்புச்செழியன் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப் பதிவு செய்தனர். அதேவேளையில் இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் அன்புச்செழியன் மீது கொலை வழக்குப் பதிய வேண்டும் என வலியுறுத்தினர்.
3 தனிப்படைகள்: தலைமறைவாக உள்ள அன்புச்செழியனைக் கைது செய்வதற்கு 3 தனிப்படைகள் அமைத்து சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விசுவநாதன் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, தனிப்படை போலீஸார், அசோக்குமார் எழுதிய இரு பக்கக் கடிதத்தை, தடயவியல் துறை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர். அதேபோல அசோக்குமார் செல்லிடப்பேசியில் கடந்த இரு மாதங்களாக யார், யாருடன் பேசியிருக்கிறார்? என்பது உள்ளிட்ட சில விவரங்களையும் திரட்டி வருகின்றனர்.
தென்மாவட்டங்களுக்கு தனிப்படை விரைவு: அன்புச்செழியனை கைது செய்வதற்கு மதுரை, தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு தனிப் படை போலீஸார் விரைந்துள்ளனர். அவரது இருப்பிடத்தை அறிய அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோரிடமும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அன்புச்செழியனை ஓரிரு தினங்களுக்குள் கைது செய்வதற்கான நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவித்தனர்.
உடல் தகனம்: அசோக்குமாரின் உடல் மதுரை கோமதிபுரம் அல்லி தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு புதன்கிழமை இரவு கொண்டுவரப்பட்டது. நடிகர் சங்கத் தலைவர் விஷால் உள்ளிட்டோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் மேலமடை மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.