பொள்ளாச்சியை அடுத்த ஆழியாறு பகுதியில் வனத் துறை சார்பில் யானை சவாரி வெள்ளிக்கிழமை (நவ.24) தொடங்கவுள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப்பில் நடைபெறும் யானை சவாரி சுற்றுலாப் பயணிகளை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இதைத் தொடர்ந்து, ஆழியாறு பகுதியிலும் யானை சவாரியைத் தொடங்க வனத் துறை திட்டமிட்டது. அதன்படி, ஆழியாறில் யானை சவாரி வெள்ளிக்கிழமை காலை தொடங்கப்பட உள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வரவேற்பை பொருத்து யானை சவாரிக்கு கூடுதலாக யானைகளைக் கொண்டுவருவது குறித்து வனத் துறையினர் ஆலோசித்து முடிவு எடுக்கவுள்ளனர்.
தற்போது, ஆழியாறை அடுத்த குரங்கு அருவியில் தொடங்கும் யானை சவாரி, ஆதாளியம்மன் கோயில் வரை சென்று அங்கிருந்து ஆழியாறு அணைப் பகுதி வழியாக மீண்டும் குரங்கு அருவியில் முடிவடையும். இதற்காக நபர் ஒன்றுக்கு ரூ. 200 கட்டணமும், 4 பேர் ஒரு முறை சவாரி செய்ய மொத்த கட்டணமாக ரூ.800 வசூலிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்தனர்.