எனது சொந்த வாழ்க்கை குறித்து பாஜகவினர் வரம்புமீறி விமர்சிப்பதை ஏற்க முடியாது என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் பெங்களூரில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது:
மூத்த பத்திரிகையாளர் கெளரி லங்கேஷின் படுகொலை தொடர்பாக பிரதமர் மோடி மெளனமாக இருப்பது ஏன்? என்று நான் கேள்வி எழுப்பியதற்கு, பாஜக எம்.பி. பிரதாப் சிம்ஹா தனது முகநூல், சுட்டுரைப் பதிவில் எனது சொந்த வாழ்க்கையை கொச்சைப்படுத்த முயற்சித்துள்ளார். இதை சகித்துக் கொள்ள இயலாது.
இதுதொடர்பாக பிரதாப் சிம்ஹாவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். ஒருசில விவகாரங்களில் பிரதமர் மோடி மெளனமாக இருப்பது ஆபத்தான விளைவுகளுக்கு வழிவகுக்கும்.
திரைப்படத் தயாரிப்பாளர் அசோக்குமாரின் தற்கொலை வேதனை அளிக்கிறது. திரைப்படக் கலைஞர்கள் சேர்ந்து பணப் பிரச்னையில் உள்ள தயாரிப்பாளர்களுக்கு நிதியுதவி அளிக்கலாமே என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார். அரசியல்வாதிகள் ஒன்று சேர்ந்து தாங்கள் ஊதியத்திலிருந்து விவசாயிகளுக்கு உதவலாமே? என்றார்.