ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை வாக்குக்குப் பணம் கொடுக்காதப்படி, தேர்தல் ஆணையம் நேர்மையாக நடத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
முடக்கி வைக்கப்பட்டிருந்த இரட்டை இலைச் சின்னமும், கட்சியின் பெயர் மற்றும் கொடியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணிக்கு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு பின்னால் பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும், மத்திய அரசின் தலையீட்டால்தான் சின்னம் கிடைத்ததாகவும் சர்ச்சைகள் எழுந்துள்ளன.
மேலும், இரட்டை இலை சின்னம் குறித்து அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்துக்குள் ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தற்போது உள்ள சூழலில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை ஓட்டுக்கு ஒரு ரூபாய்கூட பணம் வழங்கப்படாமல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடத்திட தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மார்க்சிஸ்ட் தீர்மானம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம், சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா இல்லாமல் நேர்மையாக நடத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தமிழகத்தில் புதிதாக 70 மணல் குவாரிகள் அமைப்பதை அரசு கைவிட்டு, உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியபடி செயற்கை மணல் (எம்சாண்ட்) உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அதுவரை மணல் இறக்குமதிக்கு அரசு அனுமதிக்க வேண்டும்.
சென்னையில் கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு வசித்த ஏழை மக்களுக்கு அருகிலேயே மாற்று குடியிருப்புகளை அரசு கட்டுக் கொடுக்க வேண்டும். அரசுக்குச் சொந்தமான இடங்களை ஆக்கிரமித்துள்ள தனியார் பெரு நிறுவனங்கள் மீதும் இதேபோல் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.
கந்துவட்டி கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அன்புச்செழியன் உள்ளிட்ட நபர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் அரசு அதிகாரிகள், காவல் துறையினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.