காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காஞ்சிபுரம் பட்டு சேலை உற்பத்தியில் பிரசித்தி பெற்ற பகுதியாகவும், கோயில் நகரமாகவும் விளங்கி வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து அரசு, தனியார் நிறுவன, அலுவலகங்களுக்கு நாள்தோறும் அதிகமானோர் பேருந்து, ரயில்களில் சென்று வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரத்திலிருந்து சென்னைக்கு, திருமால்பூரிலிருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னைக்கும், சென்னையிலிருந்து திருமால்பூருக்கும் நாள்தோறும் 9 ரயில்கள் இயக்கப்படுகின்றன. இவற்றில், காலை 5.40 முதல் இரவு 8.20 மணிக்கு ரயில் சேவை முடிவடைகிறது. அதன்படி, சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.50 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12.30 மணிக்கு திருமால்பூர் சென்றடைகிறது. தொடர்ந்து, நண்பகல் 1.35 மணிக்கு புறப்பட்டு 4.20 மணிக்கு திருமால்பூர் வந்தடைகிறது. அதுபோல், திருமால்பூரிலிருந்து காலை 10.30 மற்றும் 1.40 மணிக்குப் புறப்பட்டு சென்னை கடற்கரையை 1.20, 4.20 மணிக்கு சென்றடைகிறது. இதைத் தவிர வேறு ரயில் சேவை இல்லை. எனவே, கூடுதல் ரயில் சேவையை அதிகரிக்க வேண்டும் எனப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர் தமிழ்ச்செல்வன், சங்கரன் உள்ளிட்டோர் கூறுகையில், திருமால்பூரிலிருந்து புறப்படும் ரயில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாகச் சென்னை கடற்கரையை சென்றடைகிறது. இச்சேவைகள் காலை, மாலை எனக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உள்ளது. இதனால், 3 மணி நேரம் கால இடைவெளியில் அடுத்த ரயில் சேவை தொடங்கும் வகையில் உள்ளதால், ரயில் மூலம் சென்னை செல்லும் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், செங்கல்பட்டிலிருந்து அரக்கோணம் செல்லும் வகையில் திருமால்பூரை அடுத்த தக்கோலத்திலிருந்து சுமார் 10 கிமீ தொலைவு ரயில் சேவையை நீட்டித்தால், வட, மேற்கு மாவட்டப் பயணிகள் பயனடைவர். எனவே, கூடுதல் ரயில்களை இயக்குவதற்கும், அரக்கோணம் வரை ரயில் சேவை நீட்டிப்பது தொடர்பாகவும் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதோடு, ரயில்வே நிர்வாகத்தையும் கோரி வருகிறோம். இக்கோரிக்கையை ஏற்று அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.