மனங்கள் உருண்டுகொண்டு தான் இருக்கும் போல: ஆஸ்பையர் சுவாமிநாதன் கருத்து

இரட்டை இலைச் சின்னம் மீட்டெடுக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் மதுரை தோப்பூரில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கும் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.
மனங்கள் உருண்டுகொண்டு தான் இருக்கும் போல: ஆஸ்பையர் சுவாமிநாதன் கருத்து

இரட்டை இலைச் சின்னம் மீட்டெடுக்கப்பட்டதைக் கொண்டாடும் வகையில் மதுரை தோப்பூரில் முதல்வர் பழனிசாமி பங்கேற்கும் முப்பெரும் விழா இன்று நடைபெற்றது.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவை, அந்த தொகுதி எம்எல்ஏ போஸ் ஏற்பாடு செய்திருந்தார்.

இவ்விழாவில் 100 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட கொடிக் கம்பத்தில், அதிமுக கொடியை முதல்வர் பழனிசாமி ஏற்றி வைத்து உரையாற்றினார். விழாவில் அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ கலந்து கொண்டனர்.

சுமார் இரண்டு வார காலத்துக்கு முன்பே திட்டமிடப்பட்ட இவ்விழாவுக்கு கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வத்துக்கோ, அவரது ஆதரவாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த விழா நடப்பது குறித்த தகவல்கள் கூட அவர்களுக்கு தெரிவிக்கப்படவில்லை.

சரியாக இரட்டை இலைச் சின்னம் பழனிசாமி அணிக்கு ஒதுக்கப்பட்டதால், வெற்றிக் கொண்டாட்டமாகவும் அமைந்த இவ்விழாவில் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்காதது குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில்தான், ஊடகச் செய்திகளுக்கு பதிலளிக்கும் வகையில், பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும், ஐ.டி. பிரிவைச் சேர்ந்தவருமான ஆஸ்பையர் சுவாமிநாதன் தனது சமூக தளப் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதாவது, 
*இரட்டை இலை மீட்பு....*
மாபெரும் கொண்டாட்டமாம்....
முப்பெரும் விழாவாம்.....
கட்சி கொடி ஏற்றுவார்களாம்......
*மாண்புமிகு அமைச்சர் அறிவிப்பு.....*

“யாருக்கும் அழைப்பும் இல்லை தகவலும் இல்லை,
தலைவர்கள் உட்பட.....”
.....மனங்கள் உருண்டுகொண்டு தான் இருக்கும் போல....

என பதிவிட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு அணிகள் ஒன்றாக இணைந்து இரட்டை இலைச் சின்னத்தையும், கட்சியின் பெயரையும் பெற்றாலும், அந்த வெற்றிக் கொண்டாட்டத்திலேயே இப்படி பிளவு ஏற்பட்டிருப்பது உண்மையான அதிமுக தொண்டர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன் கூறியிருந்தது, இன்றைய நிகழ்ச்சியின் மூலம் வெளிப்படையாகியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com