சென்னை: தமிழகத்தில் தற்பொழுது துவங்கியுள்ள வடகிழக்கு பருவ மழையின் மூன்றாவது நிலையில் தென் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழையும், சென்னையில் விட்டு விட்டும் மழை இருக்கும் என தமிழ்நாடு வெதர் மேன் பதிவு செய்துள்ளார்.
இது பற்றிய தமிழ்நாடு வெதர்மேன் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தற்பொழுது வடகிழக்குப் பருவமழையின் மூன்றாவது காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ளது. இது இலங்கையின் கிழக்கே இருப்பதால், பின்னர் இலங்கை வழியாக அரபிக்கடலுக்குள் சென்றுவிடும். இதன் காரணமாக தென்தமிழகத்தில் மேகக்கூட்டமும் அதனால் மழையும் இருக்கும். இதன் காரணமாக தென் தமிழகம் முழுமைக்கும் நல்ல மழையை கொடுக்க சாதகமான நிலை இருக்கிறது.
சென்னையைப் பொருத்தவரை மிதமான மழையே இருக்கும். புறநகர் பகுதிகளஆன காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் திங்கள் தொடங்கி கிழக்கில் இருந்து ஈரப்பதக் காற்று வீசும். பெரும்பாலான அடர்த்தியான மேகக்கூட்டங்கள் கடந்துவிட்டதால், பெரிய அளவிலான மழைக்கு வாய்ப்பில்லை.
அடுத்த 3 நாட்கள் சென்னையில் மிதமான மழையோடு காலநிலை ரம்மியமாக இருக்கும். அவ்வப்போது திடீர்மழையும், சிறு தூறலும் போடக்கூடும். சென்னையில் 26,27,28 ஆகிய தேதிகளில் இடைவெளி விட்டு, அவ்வப்போது மிதமான மழைக்கு வாய்ப்பு உண்டு.
வடகிழக்கு பருவமழை முடிந்து விட்டது என்பது போன்ற வதந்திகளையும் நம்பாதீர்கள். சென்னையில் அவ்வப்போது, இடைவெளிவிட்டு சிறிய அளவிலான மழை பெய்யக்கூடும். இதே போன்றே அடுத்த 3 நாட்களுக்கும் தொடரும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.