வேலுரை அடுத்துள்ள அரக்கோணம் அருகே பனப்பாக்கம் கிராம அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி (16), சங்கரி (16), தீபா (16), மனீஷா (16) ஆகிய 4 மாணவிகள் பிளஸ் 1 படித்து வந்தனர்.
இந்த 4 மாணவிகளும் சரியாகப் படிக்காததால் வகுப்பாசிரியை, அவர்கள் 4 பேரையும் வெள்ளிக்கிழமை திட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவிகள் 4 பேரும் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
மாணவிகள் தற்கொலை குறித்து விசாரித்த விசாரணைக் குழுவினரிடம், பள்ளி மாணவிகள் அளித்த தகவலின் அடிப்படையில், தாற்காலிக ஆசிரியர்களாக பணியாற்றி வந்த லில்லி, சிவக்குமாரியை பணி நீக்கம் செய்து திங்கள்கிழமை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அப்பள்ளித் தலைமை ஆசிரியை மற்றும் வகுப்பு ஆசிரியை ஆகிய இருவரும் கடந்த சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த மாணவிகளுக்கு இரங்கல் தெரிவித்தும், அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டார்.
மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். உயிரிழந்த மாணவிகளின் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.