திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே பள்ளி மாணவரின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை கைது செய்யப்பட்டார்.
கொரடாச்சேரி வட்டம், குளிக்கரையைச் சேர்ந்தவர் சுந்தர். விவசாயத் தொழிலாளி. இவரது மகன் சுரேந்தர் (13). அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தலைமுடி அதிகமாக வளர்த்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை பள்ளிக்குச் சென்ற சுரேந்தரிடம் அதிகமாக முடி வளர்த்துள்ளது குறித்து ஆசிரியை விஜயா கேட்டாராம். இதற்கு, தனது தந்தை சபரிமலைக்கு மாலை போட்டுள்ளதால் தலைமுடியை வெட்டவில்லை என சுரேந்தர் தெரிவித்துள்ளார். இதை ஏற்காத ஆசிரியை விஜயா மற்றொரு மாணவரிடம் பிளேடு வாங்கி வரச் சொல்லி சுரேந்தரின் தலை முடியை வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து மாணவரின் பெற்றோர் கொரடாச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிரியை விஜயாவைக் கைது செய்தனர். பின்னர், அவரை நன்னிலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவாரூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.
ஆசிரியை பணியிடை நீக்கம்: இதனிடையே, துறைரீதியான நடவடிக்கையாக ஆசிரியை விஜயாவை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.