பல்கலைக்கழகம்' என்ற பெயரை நீக்க நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) இறுதிக் கெடு விதித்துள்ளது.
இன்று மாலை 4 மணிக்குள்...அதன்படி வியாழக்கிழமை (நவ.30) மாலை 4 மணிக்குள்ளாக மாற்றுப் பெயரை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமர்ப்பிக்கவேண்டும். இல்லையெனில் நிகர்நிலை பல்கலைக்கழகம் அந்தஸ்தை ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழகத்திலுள்ள 10 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட நாடு முழுவதும் 22 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பர் 3-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், நாடு முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், அந்தக் கல்வி நிறுவனங்களின் பெயரிலிருந்து 'பல்கலைக்கழகம்' என்ற பெயரை நீக்க வேண்டும் என நவம்பர் 10 மற்றும் நவம்பர் 13 ஆம் தேதிகளில் யுஜிசி சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அறிவுறுத்தப்பட்டது. மேலும், இந்தக் கடிதம் கிடைத்த 15 நாள்களில், 'பல்கலைக்கழகம்' என்ற பெயரை நீக்குவதோடு, அதற்கான மாற்றுப் பெயரை யுஜிசி-யிடம் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், பல நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் மாற்றுப் பெயரை இதுவரை யுஜிசி-யிடம் சமர்ப்பிக்கவில்லை. இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு இப்போது இறுதி வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அதன்படி, வியாழக்கிழமை (நவ.30) மாலை 4 மணிக்குள் மாற்றுப் பெயரை ல்ந்ற்ட்ஹந்ன்ழ்.ன்ஞ்ஸ்ரீஃய்ண்ஸ்ரீ.ண்ய், ள்ர்ஸ்ரீல்ல்ண்.ன்ஞ்ஸ்ரீஃஹ்ஹட்ர்ர்.ஸ்ரீர்ம் ஆகிய மின்னஞ்சல் முகவரிகளில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
இல்லையெனில் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை ரத்து செய்ய, மத்திய அரசிடம் பரிந்துரைத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என யுஜிசி தெரிவித்துள்ளது.