சென்னை: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறைச்சாலையில் உள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, கல்லீரல் பிரச்சினை காரணமாக மருத்துவமனையில் கவலைக்கிடமாக உள்ள தனது கணவர் நடராஜனை பார்ப்பதற்காக, தசரா விடுமுறைக்கு பிறகு பரோலில் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் சசிகலா, பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபமாக அவரது கணவர் நடராஜன் சிறுநீரகம், கல்லீரல் ஆகிய உறுப்புக்கள் செயல் இழந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடந்த வாரத்தில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதன் காரணமாக சசிகலா பரோலில் வெளிவர உள்ளதாகவும் தகவல் வெளியானது. ஆனால் பரோலில் வெளியே செல்வதற்கு கடுமையான விதிமுறைகள் இருப்பதால், அவர் அப்பொழுது பரோலுக்கு விண்ணப்பிக்கவில்லை.
தற்பொழுது பெங்களூரு சிறைத்துறை நிர்வாகம், நீதிமன்றம் ஆகியவற்றுக்கு தசரா விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே தற்பொழுது சசிகலா பரோல் கேட்டு விண்ணப்பிக்க முடியாது. எனவே தசரா விடுமுறை முடிந்த பிறகு, சசிகலா அவசர பரோல் கேட்க உள்ளதாக தற்பொழுது அதிமுக வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
கர்நாடக சிறைத்துறை விதிமுறைகளின்படி மருத்துவ காரணங்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக 15 நாட்கள் வரை அவசர பரோலில் செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.