வளிமண்டலத்தின் மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:
கிழக்கு மத்திய அரபிக் கடல் பகுதி முதல் கர்நாடகக் கடற்கரை வரை ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்குச் சுழற்சியின் காரணமாக வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஆங்காங்கே ஓரிரு இடங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
அதே நேரம் தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்தனர்.
செவ்வாய்க்கிழமை பதிவான மழை நிலவரம் (மி.மீட்டரில்): திண்டுக்கல்- 70, ஒகேனக்கல், தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி - 50, திருவண்ணாமலை மாவட்டம் போளூர், வேலூர், மதுராந்தகம் - 40, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, ஆம்பூர் - 30, ஆரணி, உத்தரமேரூர், பழனி, திண்டுக்கல் மாவட்டம் சத்ரபட்டி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், வந்தாவாசி - 10.