பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களுடன் ஸ்மார்ட் கார்டுகள் வழங்க திட்டமிடப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அளவிலான குடியரசுத் தின விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்க வந்த அவர் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறது பள்ளி பாடத்திட்டம் மாற்றப்படுகிறது. அதற்கான முன்வரைவு நவம்பர் 15-ஆம்தேதி வெளியிடப்பட்டு, 15 நாள்கள் பெற்றோர்கள், கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்படும். அதன் அடிப்படையில் புதிய பாடத்திட்டம் இறுதி செய்யப்பட்டு அடுத்தாண்டு முதல் நடைமுறைக்கு வரும்.
தமிழக மாணவர்கள் எதையும் விரைவாக தெரிந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். அதற்கேற்ற வகையில், சி.பி.எஸ்.இ. பாடத்துக்கு இணையாக அனைத்துப் போட்டித்தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படும்.
பள்ளி மாணவர்களின் முழு விவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கும் பணி அடுத்த மாதத்திற்குள் நிறைவடையும். இதில், மாணவர்கள் ஆதார் எண், குடும்ப அட்டை, முகவரி, ரத்த வகை உள்ளிட்ட அம்சங்கள் இடம் பெறும். மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அனைத்து வகை பள்ளிகளிலும், தனியார் நிறுவனங்களின் சமூகப்பொறுப்புணர்வு திட்ட நிதியின் கீழ் 10,000 கழிவறைகள் கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி வளாகங்களில் டெங்கு காய்ச்சல் பரவாத வகையில் துôய்மையாக பராமரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்துவது குறித்து அறிக்கை அளிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து முதல்வர், நிதி அமைச்சர், தலைமைச் செயலாளர் உள்ளிட்டோர்ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பர் என்றார் அவர்.