தமிழகத்தில் விவசாயமும், தொழில்வளமும் அழிவு நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கூறினார்.
காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்துக்கு உள்பட்ட செய்யூர், மதுராந்தகம், உத்தரமேரூர், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளைச் சேர்ந்த பாமக செயல்வீரர்களின் கூட்டம் மதுராந்தகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் வா.கோபாலகண்ணன் வரவேற்றார். மாநில துணைப் பொதுச் செயலர் பொன்.கங்காதரன் முன்னிலை வகித்தார். மதுராந்தகம் நகரச் செயலர் மகேஷ்குமார் வரவேற்றார். கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் மாநில சமூக முன்னேற்றக் கழக செயலர் இரா.பரந்தாமன், மாவட்ட செயலர்கள் மகேஷ்குமார், ராமானுஜ ரெட்டியார், செந்தில்குமார், மாநில இளைஞரணி செயலர் தீனதயாளன், மாவட்ட துணைச் செயலர் நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதில் பல்வேறு கட்சிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் ஜி.கே.மணி முன்னிலையில் பாமகவில் இணைந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி கூறியதாவது:
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த தேசிய நிதி ஆணையம் சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும், கடந்த ஓர் ஆண்டு காலமாக இதுவரை தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருந்து வருகிறது.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருந்தால் அந்தந்தபகுதி மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சீராக நடைபெற்று இருக்கும். தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என பாமக கோரி வருகிறது. படித்துவிட்டு வேலை கிடைக்காமல் 87 லட்சம் பேர் உள்ளனர். தமிழகத்தில் தற்போது விவசாயமும், தொழில் வளமும் முற்றிலும் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் முக்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளன. நோக்கியா உள்ளிட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதால், இங்கு வேலை செய்தவர்களுக்கு வேறு வேலை கிடைக்காமல் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைகளை வழங்காமல் வெளிமாநில இளைஞர்களுக்கு வேலைகள் அளிக்கப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு அக்கறை செலுத்தவில்லை என்றார்.