பெண் மருத்துவருக்கு அரிவாள் வெட்டு: கூலிப் படையை ஏவிய டாக்டர் கைது

தனது கிளினிக்கில் வேலை செய்த பெண் மருத்துவர் விலகி தனியாக கிளினிக் தொடங்கியதால் ஆத்திரமடைந்த டாக்டர், கூலிப் படையை ஏவி பெண் மருத்துவரை கொலை செய்ய முயன்று சிக்கினார்.
பெண் மருத்துவருக்கு அரிவாள் வெட்டு: கூலிப் படையை ஏவிய டாக்டர் கைது

தனது கிளினிக்கில் வேலை செய்த பெண் மருத்துவர் விலகி தனியாக கிளினிக் தொடங்கியதால் ஆத்திரமடைந்த டாக்டர், கூலிப் படையை ஏவி பெண் மருத்துவரை கொலை செய்ய முயன்று சிக்கினார். இதில், அந்தப் பெண் மருத்துவருக்கு பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது.
இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறப்பட்டதாவது:- அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் 'சென்னை பெர்ட்டிலிட்டி சென்ட்டர்' என்ற பெயரில் குழந்தையின்மை சிகிச்சை மையத்தை டாக்டர் வி.எம்.தாமஸ்
நடத்தி வருகிறார். இந்த மையத்தில், பெரம்பூர் பட்டேல் சாலையில் வசிக்கும் டாக்டர் ரம்யா (35) என்பவர் பணியாற்றினார். குழந்தையின்மை மருத்துவ சிகிச்சை நிபுணரான டாக்டர் ரம்யாவின் சிகிச்சை காரணமாக நோயாளிகளின் வருகையும் அதிகரித்தது.
தனியாக கிளினிக் தொடங்கிய டாக்டர் ரம்யா: டாக்டர் தாமசும், டாக்டர் ரம்யாவும் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் நடத்தினர். இதனால் குழந்தையின்மை சிகிச்சைக்கு கூட்டம் அலைமோதியது. இந்த நிலையில் அந்த மருத்துவமனையில் மூன்றாண்டுகள் பணியாற்றிய டாக்டர் ரம்யா வேலையிலிருந்து விலகினார்.
டாக்டர் ரம்யா, தனியாக கோயம்பேடு அருகே கிளினிக் தொடங்கினார். இதனால், குழந்தையின்மை சிகிச்சைக்கு வரும் அனைவரும் அவரது கிளினிக்குக்கு செல்லத் தொடங்கினர். இதன் காரணமாக, தாமஸ் நடத்தி வந்த கிளினிக்கில் கூட்டம் குறையத் தொடங்கியது. 
வருமானம் குறைந்ததால் ரம்யாவை மீண்டும் தனது கிளினிக்கில் இணையும்படி தாமஸ் வற்புறுத்தினார். ஆனால், அதை ரம்யா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த தாமஸ், ரம்யாவை கொலை செய்யக் கூலிப்படையை தயார் செய்ததாகக் கூறப்படுகிறது.
இதற்கான அவர் சென்னை எண்ணூரை சேர்ந்த பழனி (எ) பழனிசாமி, முகிலன் ஆகியோரைஅணுகியுள்ளார். இதற்கு கிளினிக்கில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் உதவியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ரம்யா, தனது கிளினிக்கிலிருந்து வீடு திரும்பும் நேரத்தைத் தெரிந்து கொண்ட பழனிசாமி, அவரது வீட்டின் அருகில் புதன்கிழமை (அக்.4) இரவு மறைந்திருந்தார். இதைத் தொடர்ந்து, கிளினிக்கிலிருந்து வீடு திரும்பிய ரம்யா, தனது வீட்டுக்குள் வண்டியை நிறுத்தியுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த பழனிசாமி, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ரம்யாவின் உடலில் சரமாரியாக வெட்டியுள்ளார். தலை, கைகள், முதுகு என பல இடங்களில் சரமாரியாக வெட்டுகள் விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே விழுந்தார். இதைப் பார்த்து அக்கம் பக்கத்தவர் சத்தம் போட, பழனிசாமி தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி தப்பிச் சென்றார்.
உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு ரம்யா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார். அங்கு அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ரம்யா வெட்டபட்டதால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார், டாக்டர் தாமஸ் மீது போலீஸாரிடம் புகார் அளித்தார். தன் மகளுக்கு தாமஸ் ஏற்கெனவே கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் புகாரில் தெரிவித்தார். 
இதைத் தொடர்ந்து டாக்டர் தாமஸிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக கூலிப்படையை ஏவி ரம்யாவை கொலை செய்ய ஏற்பாடு செய்ததாக தாமஸ் ஒப்புக்கொண்டார். 
உடனடியாக அவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், பழனி (எ) பழனிசாமி , முகிலன், தாமஸ் கிளினிக்கில் பணியாற்றும் 3 உதவியாளர்களையும் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com