நிலப்பரப்பில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுநிலை காரணமாகவும், மேலடுக்கு சுழற்சியின் காரணமாகவும் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறினார்.
இதுதொடர்பாக அவர் சென்னை செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
தெற்கு ஆந்திரம் முதல் தமிழகத்தின் தெற்கு பகுதி வரை நிலப்பரப்பில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதுதவிர, கர்நாடகம் முதல் தமிழகத்தின் வடக்குப் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்த இரண்டு காரணங்களால் வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வட தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆங்காங்கே ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையைப் பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
வடகிழக்குப் பருவமழை எப்போது?: தென்மேற்குப் பருவமழைக் காலம் இதுவரை நிறைவடையவில்லை. தென்மேற்குப் பருவமழை நிறைவடைந்த பிறகே, வடகிழக்குப் பருவமழைக் காலம் தொடங்கும். ஆனால் அதற்கான சூழல் இதுவரை உருவாகவில்லை என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை பதிவான மழை நிலவரம் (மி.மீட்டரில்): வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் - 100, மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டி - 90, விழுப்புரம் - 80, அரியலூர் மாவட்டம் திருமனூர், திண்டுக்கல் மாவட்டம் காமாட்சிபுரம், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் புதுச்சேரி - 70, மதுரை மாவட்டம் சோழவந்தான், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம், ஊட்டி, சேலம் மாவட்டம் ஆத்தூர் - 60.