விஜய் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவுள்ள 'மெர்சல்' திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ஏஆர் பிலிம் பேக்டரி உரிமையாளரான ஏ.ராஜேந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'எனது மகன் ஆரூத்தை வைத்து 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பில் படத்தை தயாரித்து வெளியிட கடந்த 2014 -ஆம் ஆண்டில் தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்துள்ளேன். 'மெர்சல்' என்ற தலைப்பில் நடிகர் விஜய் நடிக்கும் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகவுள்ளது. இந்தத் தலைப்பு நான் பதிவு செய்துள்ள 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பை ஒத்துள்ளது. இந்தத் தலைப்பில் படம் வெளியானால் எனக்குப் பெரும் நஷ்டம் ஏற்படும். எனவே 'மெர்சல்' என்ற பெயரில் தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனமோ அல்லது அதன் உரிமையாளரோ, படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும்' எனக் கோரியிருந்தார்.
மனுவை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், அக்டோபர் 6 -ஆம் தேதி வரை 'மெர்சல்' என்ற பெயரில் படத்தை விளம்பரப்படுத்தவோ, படத்தை வெளியிடவோ இடைக்காலத் தடையை நீட்டித்து வழக்கை ஒத்திவைத்திருந்தார்.
இந்த நிலையில், தேனாண்டாள் ஸ்டுடியோ சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ''மெர்சல்' என்ற தலைப்பும், 'மெரசலாயிட்டேன்' என்ற தலைப்பும் வெவ்வேறானவை. நாங்களும் இந்தப் படத்தின் தலைப்பை ஏற்கெனவே படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பதிவு செய்துள்ளதுடன், பெரும் பொருள் செலவில் படத்தை எடுத்துள்ளோம். தற்போது பெயரை மாற்றினால் பெரும் இழப்பு ஏற்படும். எனவே, படத் தலைப்பைப் பயன்படுத்தவும், விளம்பரப்படுத்தவும் நீதிமன்றம் விதித்துள்ள தடையை நீக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, 'மெர்சல்' படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை நீக்கி, நீதிபதி அனிதா சும்ந்த் உத்தரவிட்டார்.