பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா சம்பந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, மாவட்டத் தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை (அக்.10) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு.திருநாவுக்கரசர் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பாஜக தலைவர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷாவின் ஊழலை இணையதள பத்திரிகை ஒன்று ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது. ஜெய்ஷாவினுடைய சொத்து மதிப்பு மூன்று ஆண்டுகளில் 16 ஆயிரம் மடங்கு அதிகரித்துள்ளது. இதன்மூலம் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த பரிமால் நத்வானி, மாநிலங்களவை சுயேச்சை உறுப்பினராக பாஜக ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அமித்ஷா மகனுடைய நிறுவனத்துக்கு வருமானம் பலமடங்கு அதிகரிக்க ஆரம்பித்தது.
இந்த ஆதரவின் அடிப்படையில் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் கூட்டுறவு வங்கிகளில் பெரும் தொகை கடனாகப் பெறப்பட்டுள்ளது. ரூ. 7 கோடி வருமானம் மட்டுமே காட்டப்பட்ட நிலையில் ரூ.15.78 கோடி கடனாகப் பெறப்பட்டுள்ளது. சொத்து மதிப்பைவிட இரண்டு மடங்குக்கு மேல் வங்கிகளில் எந்த அடிப்படையில் கடன் வழங்கப்பட்டது என்பதற்கு அமித்ஷா பதில் சொல்ல வேண்டும்.
அமித் ஷா மற்றும் அவரது மகன் ஜெய்ஷா சம்மந்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிடுத்து ஊழலை துணிச்சலுடன் அம்பலப்படுத்திய இணையதள பத்திரிகையை மிரட்டக் கூடாது.
இன்று ஆர்ப்பாட்டம்: ஊழல் செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் செவ்வாய்க்கிழமை (அக்.10) காலை 11 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். சென்னையில் புதன்கிழமை (அக்.11) காலை 10.30 மணியளவில் என் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சு.திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.